28 ஆண்டுகள் பழமையானவன்...!

இடுகையிட்டது: திங்கள், 9 ஆகஸ்ட், 2010 by Unknown in லேபிள்கள்:
2

     இன்னும் 1 மணி நேரம் தான் இருக்கிறது (இதை எழுத ஆரம்பிக்கும்போது), அதுவும் டென்மார்க் நேரத்தில்; இந்திய நேரப்படி இப்போது நான் 28 ஆண்டுகள் பழமையானவன். ஏனோ 28 வயதுடன் இளைஞன் என்ற எண்ணம், என்னை விட்டு போய்விட்டது. இனி நான் ஒரு ஆண், ஆடவன். அறிவியல் பூர்வமாகவோ, உளவியல் பூர்வமாகவோ இந்த வரையரைகள் சரியா தவரா என்று எனக்கு தெரியவில்லை; இப்போதைக்கு அதை தெரிந்துகொள்ளவும் ஆர்வமில்லை. ஆனால் சில நேரங்களில் நுண்ணுணர்வுகளால் வரையருக்கப்படும் வடிவங்கள் அறிவியலால் அழிக்கப்படுவதில்லை.

     என் பெயர் விடுதலை. பெரியாரை வாழ்வியலாக ஏற்றுக்கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்து மயிலாடுதுறையில் வளர்ந்தவன். இது வரை 'நளன்' என்ற பெயரில் இணையத்திரைக்குப்பின்னால் நின்று கொண்டு அவ்வபோது எழுதி வந்திருக்கிறேன். இப்போது முழுமையாய் என்னை வெளிப்படுத்திக்தகொள்ள முனைந்துகொண்டிருகிறேன். ஆகஸ்டு 2010, எனக்கு 28 வயது முடிந்தது. என்னவெல்லாமோ பெரிதாக செய்யவேண்டும் என்ற சின்ன சின்ன ஆசைகள் கொண்டு கட்டிய கோட்டைகள் ஏராளம். இளநிலை அறிவியல் படிக்கும்போது, நண்பன் செளந்தரோடு சேர்ந்து 1330 திருக்குறளையும் 1330 படங்களாக வரையவேண்டும் என்ற பேராசை தோன்றியது. இருவரும் சேர்ந்து திருக்குறள் படிக்க ஆரம்பித்தோம், பின் தமிழாசிரியர்களை சந்தித்தோம்; பெரும்பாலும் ஏமாற்றங்களையே அவர்களும் பரிசளித்தனர். ஒரு சிலரின் பாராட்டுக்களும், வரவேற்புகளும் கொடுத்த உற்சாகத்தில் ஒரு சில படங்களும் வரைய ஆரம்பித்தோம். முதட்குறளுக்கு செளந்தர் ஒரு ஓவியம் வரைந்தான். சுழன்றும் ஏர்ப்பின்னது உலகத்திற்கு நான் வரைந்தேன், பீலிபெய் சாகாடும் குறளுக்கு இருவருமே வரைய ஆரம்பித்தோம்...... என்று அந்த ஆசை முடிந்தது என்று எங்களுக்கே தெரியவில்லை. பின் நான் திருச்சி வளனார் கல்லூரியில் முதுநிலை அறிவியல் படிக்கச்சென்றுவிட்டேன். செளந்தர் ஊரிலேயே கணிப்பொறி அறிவியல் படிக்கப்போய்விட்டான். அன்று ஒருநாள் என் விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தபோது எங்களுக்குள் பகிர்ந்துகொண்டோம்: எல்லாம் முடிந்துவிட்டது, இனி மெற்படிப்பு வேலை என்று போய்விடுவோம், இனிமேல் இதை செய்யமுடியாதே என்று வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருந்தோம். அன்று இருந்த அதே மனநிலை எனக்கு இன்று இருக்கிறது.

     இதுவரை, செய்ய நினைத்த பல பணிகள் ஏதேதோ காரணங்களால் முழுமையாகவோ, அல்லது முற்றுமாகவோ செய்ய முடியாமல் போயிருக்கிறது. ஏன் என்று தேடத்தேட புதிதாய் புதிதாய் காரணங்களாகக் குவிகின்றன; அதன் சுமை மேலே ஏதும் செய்யவிடாமல் தடுத்தும் விடுகிறது. அதனால், காரணங்கள் தேடுவதை நிருத்திவிட்டேன். காரியங்கள் தேடத்தொடங்கியுள்ளேன். ஆனால் இறந்த காலத்தில் நான் கற்றுக்கொண்ட, பெற்றுக்கொண்ட மனிதர்களின் நிணைவுகள் அலாதியானவை. ஒரு சிலர் என் கற்பனைக்கு மேடை கொடுத்தனர், வேறு சிலர் என் சிந்தனைகளை செதுக்கிக்கொள்ள உதவினர். ஏனோ இவற்றையெல்லாம் இன்று அசைபோடத்தோண்றியது. அதை பதிவுசெய்ய வேண்டியே இந்த பதிவு. என் கற்பனைகளுக்கும், சிந்தனைகளுக்கும் வடிவம் கொடுக்க இக்குறுந்தளம் மூலம் தொடர்ந்தும் பதிவுலகில் இணைந்திருப்பேன். என் பகிர்வை வாசிக்கும் நண்பர்களுக்கு என் நன்றிகள்!

2 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள்.வளர்க,வெள்க.

  1. @இறைகற்பனைஇலான்
    நன்றி!